அந்நிய செலாவணியை அதிகமாக ஈட்டித்தரக்கூடிய மீனவர்களை கௌரவப்படுத்தும் வகையில், நமோ மீன் கண்காட்சி கொண்டாடப்படுகிறது. மீனவர் தினத்தை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வருடம் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
குமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் குளச்சல் கடற்கரையில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல போட்டிகளை நடத்திட மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் அரசு சார்பில் மீனவர் தின கொண்டாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சென்னை மாவட்ட பாஜக மீனவர் அணி சார்பில் மீன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு நமோ மீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயர் விளக்கம் அளிக்கப்படும் வகையில் மீன் கண்காட்சி நடைபெறும் என்று தெரிகிறது. ஒரு சில மீன்கள்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கண்காட்சியில் சுமார் 60 வகையான மீன்கள் இடம் பெற்று இருந்தன.
இந்த மீன் கண்காட்சியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களின் வாழ்வாதாரத்துக்கு துணை நிற்கும் பொதுமக்களுக்கு, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று சிறிதளவு மீனை இலவசமாக பரிசளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.