
கட்சி தொடர்பான விவகாரங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாது என மைத்ரேயனின் கருத்துக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்ட ஓபிஎஸ் அணி, நீண்ட இழுபறிக்குப் பிறகு பழனிசாமி அணியுடன் இணைந்தது.
பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தாலும், இருதரப்புக்கும் இடையே மனக்கசப்பு இருக்கத்தான் செய்கிறது என பேசப்பட்டது. மேலும் அதிகாரப் பகிர்விலும் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் எந்நேரம் வேண்டுமானாலும் ஓபிஎஸ் அணி, மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இரு அணிகளும் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த போதிலும், மாதங்கள்தான் உருண்டோடுகின்றன; ஆனால் கருத்து வேறுபாடு நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது என மைத்ரேயன், தனது அதிருப்தியை ஓபனாக தெரிவித்திருந்தார்.
மைத்ரேயனின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் மைத்ரேயனின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கட்சிக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அனைவரும் ஒருமித்த கருத்தோடுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மாற்றுக்கருத்து இருந்தாலும் அதை கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டும். அதைவிடுத்து பொதுவெளியில் கட்சியின் விவகாரங்களை கூறக்கூடாது என தெரிவித்தார்.
இதன்மூலம், கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதை அமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.