சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலினுக்கு கேட் போடும் மத்தியமைச்சர் எல்.முருகன்.!

By Asianet TamilFirst Published Jan 12, 2022, 9:10 PM IST
Highlights

ரூ. 4,080 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளால் 1,450 மருத்துவ இடங்கள் கூடுதலாக தமிழகத்துக்குக்  கிடைத்துள்ளது.  எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. 

சித்திரை 1-ஆம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம் எல்லோருக்கும் தெரியும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்பூரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம், கால் நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். விழாவில் பங்கேற்பதற்காக எல்.முருகன் கோவைக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் பிரதமர் அர்ப்பணிக்கிறார்.  ரூ. 4,080 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளால் 1,450 மருத்துவ இடங்கள் கூடுதலாக தமிழகத்துக்குக்  கிடைத்துள்ளது. 

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. இதற்காகப் பிரதமருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையமும் இன்று ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திருக்குறளை முன்னிலைபடுத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது. கூடுதலாக தொழில்நுட்பங்கள்தான் ஆல் இந்தியா ரேடியோவில் மேம்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மட்டுமல்ல மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணியும் நடைபெறுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிச்சயம் சிகிச்சை பெறுவார்கள்.” என்று எல்.முருகன் தெரிவித்தார். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எல்.முருகன், “சித்திரை 1-ஆம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம் எல்லோருக்கும் தெரியும்” என்று எல்.முருகன் பதில் அளித்தார்.  
 

click me!