பாமகவை சேதாரமாக்க சீக்ரெட் ஆப்ரேஷன்... அதிமுக மாஸ்டர் பிளான்… கவலையில் தைலாபுரம்

By manimegalai aFirst Published Jan 12, 2022, 7:12 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் பலன் பெற்ற பாமகவின் முக்கிய நபர்களை வளைக்கும் திட்டத்தை அதிமுக மேலிடம் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுவதால் தைலாபுரம் அதிர்ந்து போயுள்ளதாம்.

சென்னை: அதிமுக ஆட்சியில் பலன் பெற்ற பாமகவின் முக்கிய நபர்களை வளைக்கும் திட்டத்தை அதிமுக மேலிடம் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுவதால் தைலாபுரம் அதிர்ந்து போயுள்ளதாம்.

தமிழக அரசியல் கட்சிகள் பெரிதும் எதிர்நோக்கி இருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலை தான். தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், வட மாவட்டங்களில் நிலவரம் எப்படி இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்டத்திலும் ஆளும் திமுக தயாராகவே உள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதுபற்றி விரிவாக பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமையிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சமர்ப்பித்து உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படிப்பட்ட தருணத்தில் நகர்புற தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன, தங்களின் வேகத்தை கூட்டியும் வருகின்றன.

குறிப்பாக, அதிமுக தலைமை, தம்மை வட மாவட்டங்களில் பலவீனப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருப்பதை பாமக தலைமை நன்றாகவே உணர்ந்திருக்கிறதாம். அதற்கு காரணம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்பு தானாம்…

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் தகவல்கள் பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். சேலத்தில் புறநகர் அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.

அதில் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறி எடப்பாடி, பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் ரொக்கம் வழங்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் பை மட்டுமே தருவதாகவும், பொங்கல் பொருட்கள் தரமாக இல்லை என்று மக்கள் விமர்சிப்பதையும் சுட்டிக்காட்டி நிர்வாகிகளிடம் பேசினாராம்.

திமுகவின் இந்த பொய்யான வாக்குறுதிகள், நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி இருக்கிறாராம். இந்த ஆலோசனைக்கு பின்னர் தான் ஒரு முக்கியமான விஷயம் நடந்ததாம்.

சேலம் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாம்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பாமகவினர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுடன், இன்ன பிற அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனை பற்றிய தகவல்கள் தான் பாமகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

அதாவது, அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலத்தில் பலன் பெற்ற கட்சி பாமக. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினர் வளர்ச்சி பெற்றனர். இப்படி பலன் பெற்ற பாமகவினருடன் பேசி, அவர்களை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன் வைத்து இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாம்.

இதன் பிறகு, அதிமுக ஆட்சி கட்டிலில் இருந்த போது எல்லாம் பெற்ற பாமகவினரை தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாம்… விரைவில் முக்கிய நிர்வாகிகள் பலரும் அணி மாறும் காட்சிகள் அரங்கேறும் என்று கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்..!!

அதே நேரத்தில் சேலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் தைலாபுரம் பக்கம் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாம்…!! கூடிய சீக்கிரம் கட்சியினருக்கு தலைமையிடம் இருந்து முக்கிய உத்தரவுகள் சென்று சேரக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன…!!

click me!