காமராஜர் - பக்தவத்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். சட்டப்பேரவையில் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.
காமராஜர் குறித்து பேசியதை தன்னை சுய பரிசோதனை செய்து அமைச்சர் துரைமுருகன் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி மகளிரணி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமைச்சர் துரைமுருகன் வயதில் மூத்தவர். அனுபவமிக்கவர். சட்டப்பேரவையின் அவை முன்னவர். ஆனால், அவர் காமராஜரை பற்றி கூறியது வருத்தமாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜரை போன்ற எளிமையான முதலமைச்சரை உலகமே கண்டதில்லை. அப்படிப்பட்டவரை பற்றி பேசுகிறபோது சிந்தித்துப் பேச வேண்டும்.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது வாகனத்தில் செல்லும் எனக்கு எதுக்கு சைரன் என்று கேட்டவர். நான் என்ன வெளிநாட்டிலா இருக்கிறேன். எனக்கு எதற்கு இந்தப் பாதுகாப்பு என்று நிறுத்தியவர். அப்படிப்பட்ட எளிமையான முதல்வராக இருந்தவர்தான் காமராஜர். ஆனால், காமராஜர் - பக்தவத்சலம் காலத்தில் இருந்த சைரனை நிறுத்தியவர் கருணாநிதி என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். வரலாறு தெரியாமல் பேச வேண்டாம். சட்டப்பேரவையில் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது. இன்றும்கூட காங்கிரஸ் அல்லாதவர்கள்கூட காமராஜரை நேசிக்கிறார்கள்.
அதனால், துரைமுருகன் மீண்டும் அவர் தன்னை சுய பரிசோதனை செய்து தான் பேசியதை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இந்திராகாந்தி, காமராஜரை பற்றி பேச வேண்டாம் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். அ\ண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் சைரன் விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்தாலும் அமைச்சர் துரைமுருகன் செய்த தவறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.