
அமைச்சர், நீதிபதியின் கார் டிரைவர் வாங்கும் சம்பளத்தை அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தர வேண்டும் என்றும் போராட்டத்தை திசை திருப்பவே எங்கள் மீது அரசியல் சாயம் பூச அமைச்சர் நினைப்பதாகவும் சிஐடியூ சௌந்தராராஜன் கூறியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6-வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. 6-வது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என்றும் பணிக்கு திரும்பவில்லை எனில், அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று தங்கள் குடும்பத்துடன் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்தார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.வி.எஸ் கார்னரில் பணிமனை முன்பு கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை, தஞ்சை, புதுகை மாவட்டத்தில் இதுவரை 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் டிப்போவில், ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது சிஐடியூ சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றார். சென்னை, தேனாம்பேட்டையில் நாளை தொழிலாளர் நல ஆணைய அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் கூறினார். சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றார்.
தமிழக அரசு, பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்தால், இன்றிரவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும் சௌந்தரராஜன் கூறினார்.