முட்டை வடிவில் அணுகுண்டு வெடிக்கும்! அதிமுக, இரட்டை இலையை அமமுக கைப்பற்றும்! டிடிவி தினகரன் 

First Published Jul 9, 2018, 11:41 AM IST
Highlights
The egg shaped atomic bomb explodes - TTV Dinakaran


முட்டை வடிவில் அணுகுண்டு வெடிக்கும்... 18 எம்எல்ஏக்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சட்டப்பேரவையைக் காலி செய்து கொண்டு போகும் நிலை வரும் அப்போது அதிமுக இரட்டை இலையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் கோவையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுகவின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதன் பின்னர் அவர் பேசும்போது, அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் விளங்குவதால், இங்குள்ள தொண்டர்கள் பலரை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் செய்த சில தவறுகளால், கட்சியையும், ஆட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை நீக்கிவிட்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார் சசிகலா.

அதிகாரம் கைக்கு வந்தவுடன், அவரையே கட்சியை விட்டு நீக்கினர். ஜெயலலிதாவால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்கவே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது என்றார்.

234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று, பொது செயலாளர் சசிகலா அனுமதி அளித்தால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் அமருவேன்; இல்லையென்றால் தொண்டருக்குத்தான் அந்த பதவி என்று கூறினார்.

திருச்செங்கோடு, ராசிபுரத்தில் வருமான வரி துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. முட்டை வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்குச் செல்வார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிவரும். சட்டப்பேரவையைக் காலி செய்து கொண்டு போகும் நிலைவரும் அப்போது கட்சியையும், சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கைப்பற்றும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

click me!