பா.ரஞ்சித்தை திமுக அரசு விடக்கூடாது.. ராஜராஜசோழன் மீதான களங்கம் நீங்கணும்.. கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்!

By Asianet TamilFirst Published Nov 14, 2021, 9:21 AM IST
Highlights

ராஜராஜசோழன் ஆட்சியில் நமது நாடு உலகத்திலேயே பணக்கார நாடாக இருந்தது. அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது. அப்படிப்பட்ட ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் ஈடுபட்டுள்ளார்.

மாமன்னன் ராஜராஜசோழன், திருவள்ளுவர் மீது சாதி, மத சாயம் பூசுவதை முறியடிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய விவகாரத்தில், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து கூறுகையில், “ராஜராஜசோழன் சாதி, மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். சோழர்களின் காலம் என்பது பொற்காலம். ஒரு தலைசிறந்த முடியரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் ராஜராஜ சோழன். அவருடைய ஆட்சியில் நமது நாடு உலகத்திலேயே பணக்கார நாடாக இருந்தது. அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது. அப்படிப்பட்ட ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் ஈடுபட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே பேசும்போது மிக தவறாக அவதூறு பரப்பும் வகையில் ஒரு கருத்தை கூறியிருந்தார். அவருடைய பேச்சால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த கால அதிமுக அரசு ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இப்போது தான் பேசியது வரலாற்றுக் குறிப்பு என்று அவர் ஒரு மனுவை சமர்ப்பித்திருக்கிறா. அதனால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ராஜராஜன் சோழன் ஆட்சி காலத்தில் சாதி ஏற்ற தாழ்வே இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அனைத்து சமுதாயத்தினருக்கும் மரியாதை கொடுக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை வழங்கியவர் என்ற உண்மைகளை பதிவு செய்துள்ளனர்.

ஆனால், நீதிமன்றம் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வழக்கை ரத்து செய்திருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். ராஜராஜ சோழன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அரசு துடைக்க வேண்டும். இதேபோல திருவள்ளுவரை ஒரு மதத்தைச் சேர்ந்தவராக சித்தரிக்கிறார்கள். திருவள்ளுவர், ராஜராஜ சோழன் ஆகியோர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் மீது சாதி, மத சாயம் பூசுவதை முறியடிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டோம்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

click me!