ஆளுநர் அதிகாரத்தில் கை வைத்த திமுக அரசு.. ஆளுநர் உடனே கையெழுத்திடணும்.. வலியுறுத்தும் திமுக கூட்டணி கட்சி!

By Asianet TamilFirst Published Apr 27, 2022, 8:43 AM IST
Highlights

அரசியலமைப்பு அதிகாரத்தின்படி மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது.

சட்டப் பேரவை நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் - முதல்வர் மோதல்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியலமைப்பு அதிகாரத்தின்படி மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். 

ஆளுநர் இடையூறு

ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது. சட்டப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாட்டில் இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் முயற்சிகளை தடுத்து, அதனை நிராகரித்து விட்டு நேரடியாக செயல்படுத்தும் முயற்சியில் ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

உடனே ஒப்புதல் வழங்குங்க

இதே வழிமுறையில், தமிழகம் ஒரு முகமாக நின்று, எதிர்த்து வரும் தேசிய கல்விக் கொள்கையை உயர்கல்வித் துறையில் அமலாக்க முயற்சிப்பது மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரானதாகும். ஆளுநர் அதிகார வரம்பின் எல்லை தாண்டி, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

சட்டப் பேரவை நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Gujarat model and Dravida model : துணைவேந்தர் நியமன சட்ட திருத்தம்.. குஜராத் மாடலை பின்பற்றிய திராவிட மாடல்!

click me!