மோடியை பின்பற்றிய ஸ்டாலின்..! குஜராத் மாடலை பின்பற்றிய திராவிட மாடல்!

By Asianet TamilFirst Published Apr 27, 2022, 8:25 AM IST
Highlights

"2011-இல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, பூஞ்ச் குழு பரிந்துரையின்படி, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆளுநர் வேந்தராக நீடிக்க முடியாத நிலையை உருவாக்கினார்.” 

குஜராத்தில் துணைவேந்தர் நியமனம் ஆளுநரிடமிருந்து எப்படி மாநில அரசுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து பார்க்கலாம். 

சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம்

துணைவேந்தரை இனி மாநில அரசே நியமிக்கும்படியான சட்டத் திருத்தத்தை தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற சட்டங்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருப்பதை சட்டத்தை தாக்கல் செய்து அமைச்சர் பொன்முடி சுட்டிக் காட்டினார். மேலும் குஜராத்திலும் மோடி முதல்வராக இருந்தபோது துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டது. குஜராத்தையும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருந்தார். குஜராத்தில் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

பூஞ்ச் குழு என்ன சொன்னது? 

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் அறிவித்துள்ள போராட்டத்தின் ஒரு பகுதியாக அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அதில், “மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2007-ல் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு 2010-இல் சில பரிந்துரைகளைச் செய்தது. அதில், 'ஆளுநரின் அதிகாரங்களும், மத்திய - மாநில அரசுகளின் உறவுகளும்' என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்து பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக ஆளுநர் நீடிப்பதன் மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. 

மோடியை பின்பற்றிய ஸ்டாலின்

இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் தமது விருப்புரிமையின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்வதால் மாநில அரசோடு மோதல் ஏற்படுகிற சூழல் உருவாகிறது. அரசமைப்பு சட்டவிதி 163(1)-ன் கீழ் அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய ஆளுநர், துணைவேந்தர்கள் நியமனத்தில் அமைச்சரவையின் பரிந்துரையைப் புறக்கணிக்கிற வகையில் செயல்படுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று பூஞ்சி குழு தெளிவாகக் கூறியிருந்தது. இந்த அடிப்படையில்தான் பல மாநிலங்களில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 2011-இல் குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, இதே பூஞ்ச் குழு பரிந்துரையின்படி, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆளுநர் வேந்தராக நீடிக்க முடியாத நிலையை உருவாக்கினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக - பாஜக

இதன் அடிப்படையில் துணைவேந்தர் நியமன விஷயத்தில் குஜராத் மாடலை, திராவிட மாடல் பின்பற்றியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.. துணைவேந்த நியமன சட்டத் திருத்தத்தில் திமுக அரசின் முடிவை பாஜகவினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். குஜராத்தில் மோடி பின்பற்றிய அதே உத்தியை ஸ்டாலின் பின்பற்றிய நிலையில் திமுகவினர் வரவேற்கிறார்கள்.  

click me!