கருணாநிதி பிறந்த நாள் மாநில சுயாட்சி நாள்.. இப்படி கொண்டாடலாம்.. ஸ்டாலினுக்கு திருமாவளவன் ஐடியா.!

By Asianet TamilFirst Published Apr 26, 2022, 10:35 PM IST
Highlights

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும்.

மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய கருணாநிதியின் பிறந்தநாளை 'மாநில சுயாட்சி நாள்' அல்லது 'மாநில உரிமைகள் நாள்' என அறிவித்துக் கொண்டாட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதியை இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் ஓமாந்தூரார் வளாகத்தில் கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், கோரிக்கை ஒன்றையும் தமிழக அரசுக்கு வைத்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜூன் 03 அன்று கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுமென இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம்.

மாநில சுயாட்சி நாள்

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும். அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பன்முகத் திறன்கொண்ட கருணாநிதியின் பங்களிப்புகளிலேயே போற்றுதலுக்குரியது மாநில உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களேயாகும். எனவே, மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய கருணாநிதியின் பிறந்தநாளை 'மாநில சுயாட்சி நாள்' அல்லது 'மாநில உரிமைகள் நாள்' என அறிவித்துக் கொண்டாட வேண்டுமென முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

click me!