இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சுகேஷை டிசம்பர் 21ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி தீஸ்ஹசாரி நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதை திரும்ப பெற எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளார்.
சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார் டிடிவி.
ஆனால் சுகேஷ் சந்திராவுக்கு நீதிமன்றம் ஜாமின் தராமல் தொடர்ந்து நீதிமன்ற காவல் வழங்கி வருகின்றது.
இதனிடையே சுகேஷ் சந்திராவின் கூட்டாளிகள் என சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சுகேஷ் சந்திராவின் வழக்கு டெல்லி தீஸ்ஹசாரி நிதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுகேஷை டிசம்பர் 21ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது.