
முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க தவறியதால் தான் 2வது அலையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில்;- கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றவருக்கு பரவுகிறது. எனவே, தங்கல் மேல் பரவாமல் இருக்க ஒவ்வொருத்தரும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டும். அதேபோல, நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகின்ற சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும். கடந்த மே 24ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மே 24 முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 7000க்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது 2000ஆக குறைந்துள்ளது. இன்னம் ஒருசில நாட்களில் பாதிப்பு முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகரித்தது. அதுவும் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதல்கட்ட நிவாரணமாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நிவாரணம் ஜூன் 3ல் வழங்கப்படும். இதனை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியும் பாராட்டியுள்ளார். இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த மூன்று வார காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுபாடு இல்லை என்ற நிலைமை இப்போது இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். இந்தளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை. ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். இந்தளவுக்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை. மக்களை காக்கும் மகத்தான பணியின் என்னை நானே அர்பணித்துக்கொண்டுள்ளேன்.
தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பிபிஇ கிட் உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என்று சொல்வார்கள். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது.
கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே நான் உள்ளே சென்றேன். உங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் இப்படி போயிருக்கிறீர்களே என்று பாராட்டு ஒரு பக்கம் என்றால். முதலமைச்சர் உங்களை நீங்கள் தற்காத்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் சிலர் கண்டிக்க செய்தார்கள்.
தமிழக மக்களைக் காக்கவே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதன் மூலமாக பதற்றம் அடையும் மக்களுக்கு நான் சொல்வது - இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும். இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும். தமிழக மக்களைக் காக்கவே என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். இந்த 2வது அலையானது மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும். திமுக தலைமையிலான புதிய அரசு அமைந்து 3 வாரங்கள் தான் ஆகியுள்ளது.
எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்ய வேண்டும். அதற்கு தடையாக உள்ள கொரோனா என்னும் தடுப்பு சுவரை விரைவில் உடைத்து நொறுக்க வேண்டும். அதற்கு பிறகு தான் பல துறைகளில் மாற்றம், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். எதிர்கால புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும். கொரோனா தொற்றை வெல்வோம். நமக்காக வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.