ஒருவழியாக கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்... அதிரடிக்குத் தயாராகும் கதர்ச்சட்டைகள்..!

By Asianet TamilFirst Published Oct 9, 2021, 9:51 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் அதிரடி காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி கூட்டம்  அக்டோபர் 16 அன்று நடைபெற உள்ளது. 
 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நிரந்தர தலைவர் நியமிக்கப்படாமலேயே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
இதனால், இவர்கள் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இதற்கிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பங்களும் பதவிச் சண்டையும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பஞ்சாபில் நடந்த குழப்பங்கள், அக்கட்சி மிக பலவீனமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 16 அன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வரும் 16ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அமைப்பு ரீதியான தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பிரதானமாக கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!