
மெர்சல் திரைப்பட இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளரை பாஜகவினர் மிரட்டுவதாகவும், ஜோசப் விஜய் என குறிப்பிட்டு மத்ச்சாயம் பூசியுள்ளார் எச்.ராஜா எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள், விஜயின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுவதாகவும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் எனவும் இந்தியாவில் பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவம் இலவசம்தான் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
விஜயை கிறிஸ்தவர் என சுட்டிக்காட்டும் விதமாக அவரது பெயரை ஜோசஃப் விஜய் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல் எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மெர்சல் திரைப்பட இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளரை பாஜகவினர் மிரட்டுவதாகவும், ஜோசப் விஜய் என குறிப்பிட்டு மத்ச்சாயம் பூசியுள்ளார் எச்.ராஜா எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், பாஜகவை விமர்சித்தால் மெர்சலாகிவிடுவர் என்ற இல கணேசனின் கருத்து மோதலை உண்டுபண்ணும் விதமாக உள்ளது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.