
நரிக்குறவர் வீட்டில் ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட, மலைவாழ் இன மக்களின் பிரச்சினைகளை முன்வந்து தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நரி குறவர் சமூகத்தினரின் குடியிருப்புக்கு சென்ற முதலமைச்சர், அவர்களின் வீடுகளில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கிவிட்டு வந்தார். இந்நிலையில் சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிகள் ஆர். பிரியா. எஸ்.எஸ் தர்சினி, கே.திவ்யா ஆகியோர் சாதி ரீதியாக தங்களை பிறர் எப்படி ஒதுக்கி வைப்பதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவிகளை தலைமைசெயலகத்திற்கு நேரடியாக அழைத்து பேசினார். அப்போது தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என மாணவிகள் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது தானும் விரைவில் தங்கள் பகுதிக்கு வருவதாக முதலமைச்சர் உறுதியளித்திருத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மாணவிகள் முதல்வருடன் வீடியோ காலில் உரையாடினர். அப்போது நரிக்குறவர் சமூக மக்கள் சூழ்ந்து நிற்க ஸ்டாலின மாணவிகளுடன் பேசினார், அப்போது தங்கள் வீட்டிற்கு சாப்பிட வருமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையேற்ற முதலமைச்சர் இன்று திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் அட்டையை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி தொகை 4 நபர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தமாக 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இட்லி- கோழி கறி சாப்பிட்ட முதலமைச்சர்
இதனைதொடர்ந்து ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனையடுத்து நரிக்குறவர் மாணவிகள் ப்ரியா மற்றும் திவ்யா ஆகியோருடைய வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றார். அப்போது மாணவிகள் முதலமைச்சருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து மாணவியின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சரை பார்த்த மாணவிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். முதலமைச்சருக்கு டீ கொடுத்து உபசரித்த மாணவியின் தாய், தாங்கள் வீட்டிற்கு முதலமைச்சர் வருவதை அறிந்து இட்லி, வடை, சாம்பார், சட்னி, நாட்டுக்கோழி, முட்டை என பல வித உணவு தயாரித்து வைத்துள்ளதாக தெரிவித்தார். ஏதாவது ஒன்றை சாப்பிட கொடுங்கள் என முதலமைச்சர் கேட்டார். இதனையடுத்து இட்லியில் கோழி கறியை வைத்து முதலமைச்சருக்கு மாணவியின் தாய் கொடுத்தார். இதனை ருசித்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், சாப்பாடு ருசியாக இருப்பதாக கூறி மாணவிகளுக்கும் ஊட்டி விட்டார். இதனை தொடர்ந்து மாணவிகள் வீட்டில் இருந்து முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் பகுதிக்கு வருகை தந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை நேற்று புறக்கணித்த முதலமைச்சர், இன்று நரிக்குறவர் வீட்டில் விருந்து சாப்பிட்டது பொதுமக்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.