மத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசு.. தமிழக விவசாயிகள் சார்பில் பிரதமருக்கு எல்.முருகன் நன்றி.

By Ezhilarasan BabuFirst Published May 21, 2021, 11:47 AM IST
Highlights

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 16 அன்று பிரதம மந்திரி விவசாய உதவி திட்டத்தின் கீழ், ரூபாய் 20,667 கோடி தொகையை 9.5 கோடி விவசாயிகளுக்கு அவர்களுக்கான உதவித்தொகையின் முதல் தவணையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். 

உர மானியம் 140 சதவீதம் உயர்வு விவசாயிகளின் பாதிப்பை தடுத்து, உர விலையை குறைத்து வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுத்த பாரத பிரதமருக்கு நன்றி  என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:  

பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உர தயாரிப்பாளர்களுக்கு தரும் மானிய தொகையை 140 சதவீதம் என்று உயர்த்தப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் ஒரு மூட்டை பாஸ்பேட் உரத்தை பழைய விலைக்கே அதாவது ரூபாய் 1200  வாங்க முடியும்.  உரத்திற்கான மூல பொருட்களான பாஸ்பாரிக் அமிலம், அமோனியா ஆகியவற்றின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. விலை உயர்வு அதிகமாக இருந்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களுக்கு பழைய விலையிலேயே உரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமர் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார். 

இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 500 ஆக இருந்த உரமானியமானது 1200 ஆக உயர்த்தப்பட்டது. இது 140 சதவீத உயர்வாகும். சர்வதேச அளவில் விலை உயர்வு மிக அதிகமென்றாலும், விவசாயிகள் டிஏபி உரத்தை பழகிய விலையான ரூபாய் 1200 க்கே வாங்க ஏதுவாக கடன் சுமையை விவசாயிகள் மேல் திணிக்காமல் மத்திய அரசே அதை ஏற்க முடிவு செய்துள்ளது. ஒரு மூட்டை உரத்திற்கான மானியம், இந்த அளவு உயர்த்தப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு ஒரு மூட்டை டிஏபி உரத்தின் விலை ரூபாய் 1700 ஆகும். இதில் ரூபாய் 500ஐ மத்திய அரசு மானியமாக வழங்கியது. இதனால் உர நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூபாய் 1200ல் விற்பனை செய்து வந்தன. 

சமீபத்தில் டிஏபி உரத்திற்கான மூலப் பொருட்களான அமோனியம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றுக்கான விலை சர்வதேச அளவில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு மூட்டை டிஏபி உரத்தின் விலை, ரூபாய் 2400 ஆக உயர்ந்துள்ளது. 500 ரூபாய் மானியம் கழித்தால் விவசாயிகள் 1900 வாங்க வேண்டியிருக்கும். மத்திய அரசு எடுத்த சிறப்புமிக்க முடிவால் விவசாயிகள் பழைய விலையான ரூபாய் 1200க்கை  வாங்கிக் கொள்ளலாம். மத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசாகும். விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் அவர்களின் சுமையை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று பாரதப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ரூபாய் 80 ஆயிரம் கோடி அளவில் மத்திய அரசு உரத்திற்கான மானியத்தை வழங்கி வருகிறது. தற்போதைய விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டால், மத்திய அரசு கூடுதலாக ரூபாய் 14,175 கோடி மானியமாக வழங்குகிறது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 16 அன்று பிரதம மந்திரி விவசாய உதவி திட்டத்தின் கீழ், ரூபாய் 20,667 கோடி தொகையை 9.5 கோடி விவசாயிகளுக்கு அவர்களுக்கான உதவித்தொகையின் முதல் தவணையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இதை தொடர்ந்து விவசாயிகள் நலனிற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரிய முடிவு, தற்போதைய உரமானியம் ஆகும். உர மானியம் இந்த அளவிற்கு உயர்த்தப்பட்டு இருப்பது வரலாற்றில் இது முதல்முறை, விவசாயிகளுக்கு பாஸ்பேட் உரங்கள் குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பிரதமர் எடுத்துள்ள முடிவிற்கு தமிழக விவசாயிகள் சார்பிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!