தமிழகத்தின் குரலுக்கு பணிந்தது மத்திய அரசு..!! மார்தட்டும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2020, 10:44 AM IST
Highlights

இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து எனது கடுங்கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.

இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்ததன் விளைவாக இந்திய தொல்லியல் துறை தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து எனது கடுங்கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளும் அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பினை வரவேற்கிறேன். இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. 

சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க  தமிழகமே உரத்துக் குரல்கொடுத்தது.இந்தியத்தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, ”இந்திய பண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தையும்” ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

click me!