பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.மேலும், வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதி ஒத்திவைத்தனர்.