இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு...? சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மசோதா..! அதிர்ச்சியில் பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published May 9, 2022, 1:45 PM IST
Highlights

ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் கே என் நேரு தாக்கல் செய்துள்ளார். 
 


சொத்து வரி உயர்வு-மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது..நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சமாக 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சம் 150 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏனைய மாநகராட்சிகளிலும் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்து உத்தரவு வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. 

தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

இதனிடையே சென்னை மாநகராட்சியும் ஆண்டு தோறும் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணமானது 6 சதவீதம் அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும். இவ்வாறு உயர்வு செய்யப்படும் அனைத்தும் தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு  மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு

சிறிய மாநகரங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பெருநகர வளர்ச்சிகளுக்கான ஒரு சாத்தியமான சுகாதார முறையாக மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மையின், முக்கியத்துவத்தை (FSSM) அரசானது அங்கீகரித்துள்ளது. மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் தேசிய கொள்கைக்கு இணங்கிய வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் முழுசுழற்சி துப்புரவை வழங்குவதற்காக, கழிவுநீர் தொட்டிகளை காலமுறையில் சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடுகள் மற்றும் கழிவு நீரை கொண்டுசெல்லுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு விரிவான செயல்திட்டமானது வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே  ஆண்டுதோறும் சொத்துவரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசானது முடிவு செய்துள்ளதாக அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படவுள்ளது.

click me!