
300 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை
தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், என்எல்சி நிறுவனத்தில் அலுவலக பணிக்கு எடுக்கப்பட்ட 300 பேர்களில் கடலூர் மாவட்டம் மட்டுல்ல தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், என்எல்சி நிறுவனத்திற்கு மீண்டும் நிலம் எடுக்கவுள்ளதாகவும், இதற்கு முன்பாக நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தருவதாக உறுதி அளித்துவிட்டு இன்று வரை வேலை தரவில்லை என்று திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தமிழக வாழ்வரிமை கட்சி போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர்.
வருத்தமும் வேதனையும் அளிக்கிறது
இதற்கு பதில் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது. மத்திய அரசின் Recruitement policy மூலமாக தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றார். தமிழகத்தில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்கு நிலங்கள் கொடுத்தவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை பணிகள் வழங்கப்படவில்லை என்றும் இது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக கூறினார். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, அவரின் அலுலகத்தில் இருந்து என்எல்சி நிறுவனத்திற்கு கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் அமைச்சர் கூறினார்.
விரைவில் என்.எல்.சி அதிகாரிகளோடு ஆலோசனை
இந்த சட்டப்பேரவை முடிந்தவுடன் தொழில்துறை அமைச்சர், செயலாளர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்ந்த செயலாளர் ஆகியோர் என்.எல்.சி நிறுவன உயர் அதிகாரிகளை சென்னைக்கு உடனடியாக அழைத்து அவர்களுடன் ஆலோனை நடத்தப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்தார். மேலும், இது குறித்து என்.எல்.சி நிறுவனத்தால் கடலூரில் நிலம், வீடு இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பும் வழங்க முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிச்சயமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.