72 சதவீத வாக்குப் பதிவு என்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கமல்ஹாசன் பெருமிதம்.

Published : Apr 07, 2021, 12:30 PM IST
72 சதவீத வாக்குப் பதிவு என்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கமல்ஹாசன் பெருமிதம்.

சுருக்கம்

மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பதே அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல, அது ஒரு கூட்டு கனவு.  

தமிழகத்தின் 16வது சட்டமன்ற  தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது, கொரோனா பெருந்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. ஆனாலும் இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் 72 சதவீதம் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றி இருப்பது ஜனநாயகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ஒரு நம்பிக்கையை காட்டுவதுடன், அரசியலாளர்களின் பொறுப்பையும் கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். 100 சதவீத பங்கேற்பு,  ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம் இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என் ஆசை. 

இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் என்பது முடிவல்ல, மக்கள் பணியில் முடிவு என்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம், எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம், நிறைய அனுபவங்களை கற்று  முன்னகர்ந்து இருக்கிறோம். 

மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பதே அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல, அது ஒரு கூட்டு கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும், சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை,  மக்களை காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம். நாளை நமதே.. இவ்வாறு அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!