ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சுரக்காய் பட்டியில் வாக்குச்சாவடி எண் 148-ல் பாமக வேட்பாளர் திலகபாமாவின் சின்னமும் அவரின் பெயர் மட்டும் அவருடைய புகைப்படம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சேதப்படுத்தப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மற்றும் அவரது புகைப்படம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து மறைக்கப்பட்டதாகவும், அதனால் அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்றும் பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர். 234 தொகுதிகளிலும், தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்திருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு மோதல்கள், அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாமக வேட்பாளரின் சின்னம் மறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாமகவுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக போட்டியிடுகிறது. அங்கே பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா போட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சுரக்காய் பட்டியில் வாக்குச்சாவடி எண் 148-ல் பாமக வேட்பாளர் திலகபாமாவின் சின்னமும் அவரின் பெயர் மட்டும் அவருடைய புகைப்படம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சேதப்படுத்தப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு பதிவு செய்ய வந்தா வாக்காளர்கள் சிலர் பாமகவின் சின்னத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதை அறிந்து கொந்தளிப்பு அடைந்த திலகபாமா மற்றும் பாமக ஆதரவாளர்கள் அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.