
காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்பன உள்ளிட்ட பல அவதூறுகளை திமுக அரசின் மீது அள்ளி வீசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளின் விரக்தியால் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசிய வருவதாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. சசிகலா கூட இதை கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக இன்று காலை ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசு எண்ணற்ற பல சாதனைகளை செய்துள்ளது.
நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதி இப்படி எண்ணற்ற பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார். ஆனால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி இந்த உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மிகச்சிறப்பாக சட்டம் ஒழுங்கை பராமரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் கிடந்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் ஜாதி மத சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டது. அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1,695 கொலைகள் நடைபெற்றுள்ளது. கொள்ளைகள் 146, கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச்சூடு 16 என்று நடந்துள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களே அதிமுக திமுக ஆட்சிக்கு சாட்சியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை.
அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அது உறுதியான சட்டமாக கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கூட இருப்பதாக எடப்பாடிபழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பெரியது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது? அதிமுக ஆட்சியில் காவல் துறை தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா?. கஞ்சா விற்பனை தடுக்கும் வகையில் 813 பெயரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.