தினகரன் அணியில் இருக்கும் தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒரு எம்.எல்.ஏவை முதல்வர் பழனிசாமி இழுத்துவிட்டால் கூட அனைவரும் அவர்களுடன் இணைந்துவிடுகிறோம் என தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியது. தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் முரண்பட்ட தீர்ப்பளித்தனர். அதனால் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால், ஏற்கனவே 9 மாதங்களாக 18 தொகுதிகளிலும் மக்கள் நல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இனியும் கால தாமதம் ஏற்பட விரும்பவில்லை என தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கத்தை எதிர்த்து தனது சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாகவும், ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் வைத்து புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து தங்க தமிழ்ச்செல்வனின் சொந்த கருத்து எனவும் மற்ற 17 பேரின் கருத்துகளை கேட்டு அதன்படித்தான் நான் முடிவு செய்ய முடியும் என தினகரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ள தயார் என முதல்வரும் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
தினகரன் ஆதரவு தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் முதல்வர் தரப்புடன் இணைய போவதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதுபோன்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தினகரனுடன் இருக்கும் நாங்கள் 18 பேரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். தகுதிநீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதற்காக கருத்து வேறுபாடு என்று அர்த்தமில்லை. நாங்கள் 18 பேரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். எங்களில் ஒருவரையாவது முதல்வர் பழனிசாமி தரப்பு இழுத்துவிட்டால், நாங்கள் அனைவருமே அங்கு சென்றுவிடுகிறோம். அவர்களால் எங்களில் ஒருவரையாவது இழுக்க முடியுமா..? என தங்க தமிழ்ச்செல்வன் சவால் விடுத்தார்.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்ற செய்தியை இனிமேல் ஊடகங்களும் ஒளிபரப்ப வேண்டாம். வேறு யாரும் அந்த தகவலை பரப்ப வேண்டாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.