அரங்கேறிய அடுத்த அரெஸ்ட்…. பசுமை வழிச்சாலையை யாரும் எதிர்க்கக் கூடாது… மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ்…. இப்போ இவரு…

First Published Jun 19, 2018, 1:48 PM IST
Highlights
chennai to selam 8 way road protest valarmathi arrest


சென்னையில் இருந்து சேலத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஆச்சாங்குட்டபட்டி என்ற பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான், பியுஸ் மனுஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வளர்மதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டு சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்களைக் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சட்டப் பேரவையில் அறிவித்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்த வழித்தடத்தில் வனப்பகுதிகள், மலைப் பகுதிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் இருப்பதால்  இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பல்வேறு சமூக ஆர்வலர்களும் இத்திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி சேலத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டம் நடத்தியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த தொடர் கைதுகளுக்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கைது நடவடிக்கை தொடர்ந்தால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டபட்டி என்ற பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட வளர்மதியை போலீசார் சற்று முன் கைது செய்துள்ளனர். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர் கைது நடவடிக்கை மற்றும்  போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

click me!