அடுத்த மாதம் 17ம் தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் சார்பில் மீராகுமார் அல்லது சுஷில்குமார் ஷிண்டேவை வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து, தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளுங்கட்சியான அதிமுக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஆட்சி எடப்பாடி பழனிச்சாமியிடமும், கட்சி டிடிவி.தினகரனிடமும் இருப்பதால், யார் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. ஆனால், யாருக்கு அதிக பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், இரு அணிகளும் மீண்டும் இணையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த பேச்சு வார்த்தை நடத்தப்படாமல் முடிந்துவிட்டது.
இந்நிலையில், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நடைபெறுவதையொட்டி யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என அறிந்து கொள்ள, அவர் சந்தித்தாரா அல்லது இரு அணிகள் இணைவது குறித்து பேசினாரா என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.