சசி ஃபேமிலியில் சினிமா துறை சம்பந்தமான ஆசை பிடித்து ஆட்டியது பாஸ்கரனைத்தான். ஜெயலலிதா இருக்கும் போதே ‘தலைவன்’ எனும் தலைப்புடன் இவர் ரகளையாக போஸ்டர் ஒட்டி களமிறங்க, உளவுத்துறை மூலம் மேலிடத்துக்கு தகவல் பறந்தது. பின் சசி மூலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டார். ஆனாலும் டெல்டா மாவட்ட பகுதிகளில் இவர் பிறந்தாநாள் உள்ளிட்ட சமயங்களில் மாஸ் லுக்கில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதும், பின் கிழிக்கப்படுவதுமாக கூத்துகள் தொடரும்.
ஜெ., மறைவுக்கு பிறகு தனது சினிமா நாயகன் கனவை மேலும் விரிவாக்கினார் பாஸ்கரன். டெல்டா தாண்டி கிட்டத்தட்ட தமிழகமெங்கும் இவரது ரகளையான ஸ்டில்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு ரவுசுகள் கிளம்பின.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சசி வகையறாவை வளைத்துச் சுருட்டியடிக்கும் வருமானவரித்துறை ரெய்டில் பாஸ்கரனும் தப்பவில்லை. சினிமா மோகத்தில் மனுஷன் இருந்ததால் அதற்கான நிதி பின்புலம், இவருக்கு படம் தயாரிக்க உதவ வந்தவர்கள் யார் யார்? என்பதில் துவங்கி பல விஷயங்களை நோண்டி நுங்கெடுத்திருக்கிறது ஐ.டி.
பாஸ்கரன் வீட்டிலிருந்தும் தங்க நகைகள் எக்கச்சக்கமாய் பறிமுதலாகியிருக்கின்றன என்கிறார்கள்.
பாஸ்கரனுக்கு நிதி பின்புலமாய் இருந்த டெல்டா தேசத்து கல்வி நிறுவன அதிபர்கள் சிலரும் இந்த ரெய்டு சுனாமியில் சிக்கியிருக்கிறார்கள்! அவர்களின் சொத்துக்களும் ஆடிட்டிங்கில் உள்ளனவாம்.
பாஸ்! எனும் பெயரில் ஹீரோ ஆசையில் திரிந்த பாஸ்கரனை இந்த ரெய்டு தட்டி டம்மி பீஸாக்கி உட்கார வைத்திருப்பதாக சொல்லி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களே கலகலப்பதுதான் ஹைலைட். காரணம், சசியின் அதிகாரம் கார்டனில் உச்சத்திலிருந்த போது அ.தி.மு.க.வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பெரும் பதவிகளில் இருந்து சம்பாதித்தவர்களிடம் ‘பாஸ் எடுக்கப்போற படத்துக்கு இன்வெஸ்ட் பண்ணுங்க. அப்பதான் சின்னம்மா உங்களை சீண்டாம இருப்பாங்க.’ என்று ஒரு டீம் லாபி செய்து டார்ச்சர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்ததாம்.
இதில் பணமிழந்த வி.ஐ.பி.க்களும் ஏராளமாம்! அதுவே இப்போதைய சந்தோஷத்துக்கு காரணம்.