
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது அது பெரும்பாலான இடங்களில் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அந்த அளவிற்கு மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. ஆனால் மழை கடந்த ஒரு வார காலமாக பரவலாக குறையத் தொடங்கி வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெரிய அளவு மழைக்கான வாய்ப்பாக இருக்காது என்றாலும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இந்த பகுதியை 19ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக
16.12.2021,17.12.2021: ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 18.12.2021,19.12.2021: தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 4, திருக்குவளை (நாகப்பட்டினம்) 3, திருப்பூண்டி நாகப்பட்டினம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 2, தொண்டி (ராமநாதபுரம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 16.12.2011 முதல் 20.12.2021 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பு: நாளை (17 ஆம் தேதி) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும். இதன் காரணமாக 17.12.2021 முதல் 19.12.2021 வரை: பூமத்திய ரேகை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.