
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது.
சட்டசபை கூட்டம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், சட்டசபை கூட்டத்தொடரை வருகிற 14-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 19-ந்தேதி வரை 24 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் எனவும் தினமும் கேள்வி நேரம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இதில் 31 அமைச்சர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
மானியக் கோரிக்கை விவாதம் மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.