சட்டம் ஒழுங்கு எக்கேடு போனால் எனக்கென்ன இருக்கும் முதல்வர்! எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க! அண்ணாமலை

By vinoth kumarFirst Published Feb 16, 2023, 10:28 AM IST
Highlights

திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. 

போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரரை அடித்துக் கொலை செய்த திமுக பேரூராட்சி கவுன்சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், அவரது தம்பி பிரபு ஆகியோர் ராணுவ வீரர்கள். பிரபாகரன் கடந்த 8-ம் தேதி அதே பகுதியிலுள்ள சின்டெக்ஸ் தொட்டி அருகே துணி துவைத்துள்ளார்.

இதை சின்னசாமி கண்டித்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்று மாலை, சின்னசாமி 10-க்கும் மேற்பட்டோருடன் சென்று பிரபாகரன், பிரபு ஆகியோரை தாக்கினார். இதில்,  ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகிய 6 பேரை போலீசார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. 

தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று  இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென, தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!