தமிழக - கேரள மாநிலங்களிடையே உள்ள நதிநீர் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க இரு மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளாவுக்கு சென்றார்.
முதலமைச்சர் தலைமையிலான தமிழக குழுவினர் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று மதியம் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர், இரு மாநில முதலமைச்சர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர்.
இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பார்கள். முல்லை பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
எந்தவொரு பிரச்சனைக்கும் இந்த குழு மூலம் தீர்வு காணப்படும். இரு மாநில தலைமை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பம்பா, அச்சன்கோயில் நதிநீர் பகிர்வு குறித்து குழு முடிவு எடுக்கும் என இருவரும் தெரிவித்துள்ளனர்.