
இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகளுக்கு என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது எனவும், இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர் குழுவில் உள்ளனர். ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருட்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.