
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நிறமாக பச்சை நிறம் இருந்தது. அதனால், தமிழக அரசு தொடர்பான விளம்பரங்கள், புகைப்படங்கள், பின்னணி அனைத்தும் பச்சைமயம் ஆக்கப்பட்டது. பேருந்துகளில் பச்சை நிறம் அடிக்கப்பட்டது. அரசு அலுவலக பதாகைகள், போர்டுகள், நாளிதழ் விளம்பரங்கள் என அனைத்தும் பச்சை நிறத்தில் பளிச்சிட்டன.
2011ல் ஆட்சியைப் பிடித்த போது பச்சை வண்ணத்திலேயே மேல் கோட் அணிந்து, அதையே அனைத்து புகைப்படங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து ஊடகங்களுக்கு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னாளில் பச்சையில் கொண்டிருந்த இச்சையைக் குறைத்துக் கொண்ட ஜெயலலிதா மெரூன் நிறத்துக்கு மாறினார். அப்போதும், மெருன் நிற மேல் அங்கி அணிந்து போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார்கள் அரசுத் தரப்பில் இருந்து!
இப்போது பச்சை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது கவர்ன்மெண்ட் விளம்பரங்கள் என்கிறார்கள். அதற்கு ஏற்றார்ப்போல், இப்போது வெளியிட்ட டெங்கு தடுப்பு தின விளம்பரத்திலும் காவி தலைகாட்டியிருக்கிறது.
ஏற்கெனவே, மத்திய அரசின் நெருக்குதலால் மாநில அரசில் சில திட்டங்கள், கொள்கை முடிவுகள் மாற்றம் கண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், பச்சையிலிருந்து காவி வண்ணத்துக்கு அரசுத் தகவல் பலகை மாறி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.