இருமுடி கட்டி மலையேறிய ஓ.பி.எஸ்..! சபரிமலையில் பயபக்தியுடன் தரிசனம்..!

By Manikandan S R SFirst Published Jan 19, 2020, 11:54 AM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். தீவிர கடவுள் பக்தி உடையவராக ஓ.பி.எஸ், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்தார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தொடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலை நடைதிறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜை தை ஒன்றாம் தேதி நடந்தநிலையில் நாளையுடன் மீண்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். தீவிர கடவுள் பக்தி உடையவராக ஓ.பி.எஸ், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து நேற்று இருமுடி கட்டிய பன்னீர் செல்வம், இன்று மலையேறி சபரிமலை வந்தார். பின் பதினெட்டாம் படி வழியாக சுவாமி அய்யப்பன் சன்னதிக்கு வந்த அவர் பயபக்தியுடன் வழிபட்டார். அவருக்கு சபரிமலை தேவஸ்தானம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின் சபரிமலை சந்நிதானத்தின் தற்போதைய மேல்சாந்தியை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து நெய் அபிஷேகம் செய்து விட்டு மலை இறங்க இருக்கிறார்.

click me!