DMK : கொங்கு மண்டலத்தை கைப்பற்றும் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவின் ‘மாஸ்டர்’ பிளான் !

By Raghupati RFirst Published Dec 6, 2021, 1:26 PM IST
Highlights

வருகின்ற 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திமுகவினால், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. ஏனென்றால் அதிமுகவின் முக்கிய மூன்று முகங்களான எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமனி என்ற மூவரின் திறமையே காரணம். இந்த மூவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இன்னமும் ‘கொங்கு மண்டலம்’ இருக்கிறது. அதனை உடைக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் முக்கிய திட்டம். 

அதற்கு ஏற்றவாறு, அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை மாவட்டத்திற்கும், அமைச்சர் கே.என்.நேருவை சேலம் மாவட்டத்திற்கும் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறார். கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற அரசு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி காட்டியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த விழாவின் ஏற்பாடுகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து, செந்தில் பாலாஜியை பாராட்டி தள்ளியிருக்கிறார் முதல்வர்.

கொங்கு மண்டலத்தை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. வருகின்ற 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர இருக்கிறார்.கோவையை போலவே இங்கும் அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இருக்கிறார்.கோவையை போலவே மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுகவினரும்.  

நேற்று சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர். பார்த்திபன் எம். பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடக்கும். தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 31 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி இருக்கிறது.

இதில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்குக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவித்தால், அவர் வெற்றி பெறுவார் என்று கருதி அவரைத் தேர்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பொறாமைபடக் கூடாது. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவிகள் நிச்சயம் தேடி வரும். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக முறையில் நடைபெறாது என்று கருதியே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன், பின்னர் பல்வேறு காரணங்களால் நகர்மன்ற தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகராட்சி தேர்தல் ஒரே நாளில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவிகிதம் தருவதாக கூறி பொய்யான வாக்குறுதி கொடுத்து தான் சேலத்தில் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதை நம்பி பாமக அவர்களுடன் கூட்டணிக்குச் சென்றது. ஆனால் தற்போது இடஒதுக்கீட்டிற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் திமுக அரசு முறையிட்டு இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சேலத்திற்கு வருகிற 11-ந் தேதி தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் வருகிறார். அவருக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நான் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றேன். அதாவது 46 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டுள்ளன. அதில், சுமார் 26 ஆயிரம் பேருக்குச் சேலத்தில் 11-ந் தேதி நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலத்தில் அன்றைய தினம் நடக்கும் விழா,  தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைய வேண்டும். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை கட்சியினர் திரண்டு முதல் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

click me!