நடு வழியிலேயே உணவு இல்லாமல் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்கள்... உடனே உதவிட டி.டி.வி.தினகரன் கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Mar 27, 2020, 12:45 PM IST
Highlights

கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் உணவின்றி சிக்கித் தவிக்கும் தமிழக லாரி  ஓட்டுநர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று 3-வது நாளாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், வெளி மாநிலங்களுக்குச் சென்ற ஓட்டுநர்கள், கிளீனர்கள் உணவின்றித் தவிப்பதாகவும், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பக்கத்தில்;- கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதில், சென்ற ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும், லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

click me!