கைக்கட்டி நின்ற தமிழக அதிகாரிகள்..? மதகுகளை திறந்த கேரள அமைச்சர்கள்..? ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 4:47 PM IST
Highlights

தமிழ்நாடு அரசினுடைய இசைவுடன் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதா.?அல்லது கேரள அரசு தன்னிச்சையாக  திறந்து விட்டதா? 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :- 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீரை திறந்துவிட்டு இருப்பதையும் அப்போது தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்து இருப்பதை பார்க்கும்போது சொல்லாததையும் திமுக அரசு செய்து வருகிறது என்பது தெளிவாகிறது. அதாவது ஆட்சி கட்டிலுக்கு வருவதற்கு முன்பு உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று சொன்ன திமுக, இப்போது உரிமைக்கு கைகொடுப்போம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி கொள்வதைத் தடுக்கும் நோக்கில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையினை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையை கேரள அரசை எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. 

கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கேரளா வருவாய் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அணை அருகே உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது மதங்களிலிருந்து 514 கன அடி தண்ணீர் கேரளாவுக்கு திறந்துவிடப்பட்டதாகவும், அப்போது தமிழக அரசு சார்பில் அதிகாரிகளுடன் இருந்ததாகவும், அணை நிலவரம் குறித்து அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இருமாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளது.

இதற்கு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கம் தேனி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேசுகையில் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் உரிமை பறிபோயுள்ளதாகவும் கேரளா அரசின் விதி மீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேரள அரசை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்த செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறை என்றும், இது தமிழ்நாடு விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அவர்களுடைய உரிமைகளை அடகு வைக்கப்பட்டு விட்டது என்று விவசாயிகள் கருதுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று நிபுணர்களும், தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சரும் தெரிவித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டாத சூழ்நிலையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையில், கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியதன் அவசியம் என்ன என்பதுதான் விவசாயிகளின் வினாவாக இருக்கிறது. 

தமிழ்நாடு அரசினுடைய இசைவுடன் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதா.?அல்லது கேரள அரசு தன்னிச்சையாக  திறந்து விட்டதா? அப்படி என்றால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஏன் கலந்துகொண்டார்கள், தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாயிகளும் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்ற வினாக்கள் எழுகின்றன. இந்த வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு உண்மை நிலையை வெளிப்படையாக தமிழ்நாட்டு மக்களுக்கு விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

tags
click me!