பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக கட்டபட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, பிரதமரிடம் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில், உதகை மருத்துவ கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன்;- சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதில் ஒரு மைல் கல்லாக, இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தில்தான் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்துள்ளார். தேசிய அளவில் ஒட்டுமொத்த மருத்துவ கல்லுாரி இடங்களில் 12 சதவீதம் அதிகபட்சமாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
மருத்துவ கல்லுாரி விரைவாக உருவாக காரணமாக இருந்த கடந்த அதிமுக அரசில் இருந்தவர்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பின், அதற்கான பணியை விரைவுப்படுத்தி, திறப்பு விழாவில் பிரதமரை நல்ல முறையில் கவுரவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறேன். ஒவ்வொரு கிராம மக்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும். தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.