ஓபிஎஸின் தர்மயுத்த நாளில் சென்னை வரும் சசிகலா... ஜெ. சமாதியை அவசரமாக மூடிய அரசு... மீண்டும் ‘சமாதி’ அரசியல்.?

Published : Feb 03, 2021, 09:03 AM IST
ஓபிஎஸின் தர்மயுத்த நாளில் சென்னை வரும் சசிகலா... ஜெ. சமாதியை அவசரமாக மூடிய அரசு... மீண்டும் ‘சமாதி’ அரசியல்.?

சுருக்கம்

எம்ஜிஆர்-ஜெயலலிதா சமாதிகள் இறுதிக் கட்டப் பணிகளுக்காக மூடப்பட்டன. சசிகலா ஜெயலலிதா சமாதிக்கு செல்லாமல் இருப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.  

சென்னை மெரீனா கடற்கரையில் ஜனவரி 27ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதி திறக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் சமாதியை பார்வையிட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள பொதுப்பணித் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடங்களில் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் அருங்காட்சியகம் அறிவுத்திறன் பூங்கா உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பார்வையிட தடை வதிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பெங்களூருவில் உள்ளார். சசிகலாவுக்கு எதிராக 2017, பிப்ரவரி 7 அன்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய அதே தினத்தில் சசிகலா சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னைக்கு வரும் சசிகலா நேரடியாக ஜெயலலிதா சமாதிக்கு செல்லக்கூடும் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த சூழ்நிலையில் சமாதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா சமாதிக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். மேலும் பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. எப்படி மூடி வைத்தாலும், அன்று திறந்துதானே ஆக வேண்டும் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுகவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சமாதி அரசியல், மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!