
கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் :
அதுமட்டுமின்றி தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனையும் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவை எதிர்த்து வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
தேசிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதை தி.மு.க. தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். இன்று கண்ணூர் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வரை கேரளா அமைச்சர்கள் தலைமையிலான குழு வரவேற்றது.
கேரளா அமைச்சர் எம்.வி கோவிந்தன் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து சிவப்பு துண்டு போர்த்தி வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்தபடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த சிபிஎம் தொண்டர்கள் சிவப்பு கொடி காட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதோடு ஸ்டாலினை வரவேற்க அங்கு பெரிய அளவில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
2024 தேர்தலுக்கு அடித்தளமா ? :
மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பா.ஜனதாவை எதிர்க்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள அவர் அழைப்பு விடுக்கிறார். இதன்மூலம் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய சக்தியாக மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக நடக்கும் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பெறுவதால் தேசிய அளவில் அரசியல் நிபுணர்களின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது. ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் - முதல்வர் ஸ்டாலின் இருவரின் புகைப்படங்களை வைத்து கன்னூரில் சில இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.