இதுக்கூட தெரியாமல் குறை கூறுவதா..? மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி தந்த முதல்வர் ஈபிஎஸ்!

By Asianet TamilFirst Published Apr 7, 2020, 8:58 PM IST
Highlights

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
 

சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கொரோனா தடுப்புப் பணிகளுக்காக வழங்கிய 60 லட்சம் ரூபாய் நிதியை கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டித்திருந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சனையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
இதை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால், ரூ.25 லட்சம் அந்தந்த தொகுதிகளில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மேலும் கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ் நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

click me!