
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “ காவேரி டெல்டா பகுதியில் விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சட்டத்தினை மட்டும் இயற்றிவிட்டு, அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும், அது வேளாண் பெருமக்களுடைய நலனைப்
பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சட்டமாக இருக்கிற காரணத்தால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு உறுதியாக இருக்கிறது.
காவேரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது. வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும்.
உழவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கச் செய்திருக்கிறோம். சென்ற ஆண்டில் மேட்டூர் அணையினை குறித்த காலத்திலே, அதாவது ஜூன் 12 ஆம் தேதியே திறந்து, 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை செயல்படுத்திருக்கிறோம். மேட்டூர் அணையினைத் திறப்பதற்கு முன்பாகவே, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் 65 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை முடுக்கி விடப்பட்டது.
மேலும் படிக்க: ஆம்பூர் என்ன வட இந்தியாவா.?? மாட்டுக்கறி பிரியாணி போடுங்க.. இல்லன்னா இலவசமா கொடுப்போம்.. சீறும் சிறுத்தைகள்.
அதன் விளைவாக, கடந்த 2021 ஆண்டின் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு 4 இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கரைக் கடந்து, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையினை படைத்துள்ளோம். இது நம்முடைய ஒராண்டு சாதனையில், மிக முக்கியமான, பெருமைக்குரிய சாதனையாக அமைந்திருக்கிறது. இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் மரபுசார் நெல் இரகங்களை மீட்டெடுக்கும் திட்டம்
ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. .
பாசன நீரைப் பொறுத்தமட்டில், கர்நாடகாவிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளும், செயல்பாட்டிற்கு வரும் வகையில், விவசாயிகளும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் நல்ல முறையிலே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இந்தக் கூட்டத்திலே வழங்கிட வேண்டும் என்று பேசினார்.
மேலும் படிக்க: இது ஆத்திகர் நாத்திகர் என எல்லாருக்குமான அரசுங்க.. அட்வைஸ் செய்த கி. வீரமணியை அசால்ட் செய்த சேகர் பாபு.