தலிபான்களால் இந்தியாவுக்கு ஆபத்து.. பாகிஸ்தானையும் கைப்பற்றலாம்.. அலர்ட் செய்யும் கார்த்தி சிதம்பரம்.!

By Asianet TamilFirst Published Aug 18, 2021, 9:31 PM IST
Highlights

தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது போல பாகிஸ்தானையும் கைப்பற்றலாம் என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய விவகாரத்தில் இந்தியாவுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே தலிபான்களுடைய எண்ணம். கொடூரமான அவர்களை ஐஎஸ்ஐதான் உருவாக்கியது. அமெரிக்கா அவர்களுக்கு தீனி போட்டு வளர்த்தது. தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது போல பாகிஸ்தானையும் கைப்பற்றலாம். இதனால் இந்தியாவில் உள்ளவர்களுடன் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதை அபாயகரமான விஷயமாக பார்க்க வேண்டும்.
சீனாவுக்கும் தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை அங்கு செயல்படும் சீன தூதரகத்தின் மூலமே தெரிந்துகொள்ள முடியும். ஆப்கானிஸ்தான் விஷயத்தை இந்தியா சாதுரியமாக கையாள வேண்டும். கொடநாடு என்றாலே மர்மம்தான். அங்கு  நடந்த மர்மம் அங்கு நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாகவே உள்ளது. இதையெல்லாம் விசாரணை மூலமே வெளியே கொண்டு வர முடியும். வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக பேசுவது சிறுபிள்ளைத்தனம். நிதியமைச்சரின் புள்ளிவிவரங்கள் தவறு என்றால், அதை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறாமல் வெள்ளை அறிக்கையை அதிமுக விமர்சிப்பது தவறு.
மத்திய நிதியமைச்சர் கூறுவது எல்லாமே பொய்தான். காங்கிரஸ் கட்சிதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமா? இதை நேரடியாக விவாதிக்க நாங்கள் தயார். ஆதாரங்களுடன் எடுத்துக் கூற நாங்கள் தயார். காப்பீட்டுக் கழகங்கள் தனியார்மயம் ஆவதற்கு மாநிலங்களவையில் அதிமுக பாஜகவுக்கு ஏன் ஆதரவு அளித்தது என்பதை இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வரவேற்கிறேன். காங்கிரஸ்-திமுக பலமுறை தேர்தலை ஒன்றாக சந்தித்துள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

click me!