
கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை பதவியேற்க ஆளுநர் அழைத்ததற்கு எதிராக காங்கிரஸ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, பாஜக தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவின் சார்பில் எடியூரப்பாவிற்கு ஆளுநர், முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுத்திருந்தார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை(குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் ஒரு இடம் காலியாகும்) கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்ததால், அதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், பாஜக தரப்பில் முகுல் ரோஹத்கி, காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஆட்சியமைத்துள்ள பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால், நாளையே ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அப்படி இல்லையென்றால், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
ஆனால், நாளைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது எனவும் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார்.
ஆனால், முகுல் ரோஹத்கியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த உத்தரவிட வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அந்த வாதத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், வெளிப்படையாகவே இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க வேண்டும். பிறகு எம்.எல்.ஏக்கள் வாக்களித்து சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடக காவல்துறை டிஜிபி பாதுகாப்பளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்வரை பாஜக எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.