கனகராஜூக்கு கட்டம் சரியில்லைங்னா! திரும்பத்திரும்ப சிக்கலில் சிக்கும் சூலூர் எம்.எல்.ஏ...

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 07:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
கனகராஜூக்கு கட்டம் சரியில்லைங்னா! திரும்பத்திரும்ப சிக்கலில் சிக்கும் சூலூர் எம்.எல்.ஏ...

சுருக்கம்

Sulur MLA Kanakaraj said gold and money were promised at the time of trust vote

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்!...என்கிறது சிலப்பதிகாரம். அதாவது நாம் முன்னர் செய்த பாவம் நம்மை தேடி வந்து சேரும் என்பதுதான் அதன் விளக்கம். 

எந்த சூழலில் என்னென்ன பெரிய பாவங்கள் செய்ததோ அ.தி.முக. (தெரியாத மாதிரியே எழுதுறீங்களே பாஸ்! ஒண்ணா, ரெண்டா பட்டியல் போட? கோகுலவாணி, காயத்ரிகளின் சாபம் சும்மாவா விடும்? என்று யாரோ மனதில் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது.) இதோ இப்படி அல்லுசில்லாகி அந்தலிசிந்தலியாகிக் கொண்டிருக்கிறது. 

அதிலும் ’டைம்ஸ் நெளவ்’ நேற்று அடித்த ரிவிட் காலத்துக்கும் மறக்க முடியாத களங்கம். பன்னீர் அணியின் எம்.எல்.ஏ.வான சரவணன் போட்டுத்தாக்கி இருக்கும் விஷயங்கள் பகீரென்றிருக்கிறது. சமூக வலைதளங்களில் இதை வைத்து  கலா மாஸ்டர் ஸ்டைலில் சும்மா கிழிகிழியென கிழிக்கிறார்கள். ‘ரெண்டு கோடி இருந்தால் ஒரு எம்.எல்.ஏ.வை வாங்கிவிடலாமென்றால் நாங்க நாலு பேரு சேர்ந்து ஒரு எம்.எல்.ஏ.வை வாங்கி எங்களுக்கு டிரைவராக்கிக்குவோம்!’ என்று போட்டுத்தாக்கி இருக்கிறார் ஒருவர். அதற்கு இன்னொருவரோ ‘தலைவா, நம்ம எம்.எல்.ஏ.ங்களுக்கு எழுத படிக்க தெரியாதே! பைபாஸ்ல உங்க காரை ஓட்டுறப்ப போர்டை வாசிக்க தெரியாம எதிர்திசையில கூட்டிட்டு போயிடுவாங்க.’ என்று காய்ச்சி ஊற்றியிருக்கிறார். 

இந்த பிரச்னையில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி என்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  மூன்று பேரின் தலை உருட்டப்பட்டு கிடக்கிறது. சரவணன் போலவே சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கனகராஜூம் இப்படி கேமெரா இருப்பது தெரியாமல் வாயை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கிறார். 2 கோடி கொடுத்ததை அவரும் உறுதி செய்து பேசியதாக தகவல் பரவி கிடக்கிறது. 

கட்டத்துரைக்கு மட்டுமில்லை கனகராஜூக்கும் கட்டம் சரியில்லைதான். தொடர்ச்சியாக இப்படி வாயை விட்டு வாங்கிக் கட்டுவதே இவருக்கு பொழப்பாகிவிட்டது என்று பொங்குகிறார்கள் எடப்பாடி அணி அமைச்சர்கள். 

இதற்கு முன்பும் இப்படித்தான் சூலூர் அருகே ஒரு கல்குவாரி விஷயத்தில் தன் பேச்சை அதிகாரிகள் கேட்காததால் கடுப்பானவர்கள் ‘நான் ஒரு டைப்பான ஆளு. எடப்பாடி அணியை விட்டு விலகிடுவேன். அப்புறம் ஆட்சிக்குதான் நஷ்டம்.” என்று சொல்லி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்து சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்தபோது மக்களோடு மக்களாக இருப்பதாக கூறிவிட்டு சட்டென்று காரை வரச்சொல்லி எஸ்கேப் ஆகினார்.

இது நிகழ்ந்து சில நிமிடங்களில் ஏடிஎஸ்பி பாண்டியராஜனால் பளார் என்று ஒரு பெண் அறையப்பட்டு தமிழ்நாடே பற்றி எரிந்தது. இந்த விஷயத்திலும் எம்.எல்.ஏ.வை பிரித்து மேய்ந்தனர் மக்கள். அதன் பிறகு சிறிது நாள் கழித்து கோவையில் ஆட்சியர் அலுவலக கூட்டம் ஒன்றில் தன் பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை என்று கோபப்பட்டு கத்தினார். 

எதற்கெடுத்தாலும் யோசிக்காமல் சட்டுபுட்டென்று பேசிவிடுவதும் பிறகு பஞ்சாயத்தில் சிக்கி பஞ்சராகுவதுமே கனகராஜின் வேலையாக இருக்கிறது. 

இப்போது உச்சபட்சமாக கூவத்தூர் பண பரிவர்த்தனை பற்றி பேசி சிக்கியிருப்பதால் எடப்பாடி அரசு அரண்டு போய் கிடக்கிறது. கனகராஜை பிடித்து வாங்கித் தள்ளுகிறார்களாம் லெஃப்ட் அண்டு ரைட்டாக. 

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருக்கும் கனகராஜ் ‘நான் பேசுவது போல் வெளியான வீடியோ பொய்யானது. நான் அதைப்பார்க்க கூட இல்லை. இந்த குற்றச்சாட்டு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆளுநரை சந்திப்பதற்காக கூவத்தூரில் காத்திருந்தோம் என்று சொன்னேனே தவிர பணம், தங்கம் பற்றி பேசவில்லை.” என்று சொல்லியிருக்கிறார். 

ஆனாலும் கனகை யாரும் நம்புவதாக இல்லையாம்! எடப்பாடியே வேறொரு அமைச்சரின் லைனில் வந்து கனகை காய்ச்சிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளது. காரணம் கனகராஜ் இதுவரை இழுத்த பஞ்சாயத்துக்களிலே இது ஆபத்தானது. யாராவது வழக்கு கிழக்கு என்று போய்விட்டால் யார் சிக்கி சின்னாபின்னமாவது? என்கிற பிரச்னைதான். 
சட்டமன்ற நாட்கள் தொடர்ந்து இருப்பதால் சென்னையில் வைத்து கனகராஜுக்கு செம பரேடு இருக்கலாம் என்கிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி