
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள், தமிழ்நாட்டு போலீசாரா? என்றுபாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி குதர்க்கமாக கேட்டு மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக கடந்த மாதம் மெரீனாவில் கூடி இளைஞர்களும், மாணவர்களும் தன் எழுச்சியாகபோராட்டம் நடத்தியதில் இருந்து இளைஞர்கள் மீது வெறுப்பு உமிழும் வார்த்தைகளில் ‘பொறுக்கிகள்’ என்று டுவிட்டரில் தொடர்ந்துசுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கு தமிழ் இளைஞர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் கமல் ஹாசனையும்வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணிய சாமி கருத்துக்களை தெரிவித்தார். இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, தமிழகம் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இடையே மறித்து சுப்பிரமணிய சாமி வாதிடும் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துள்ளது, போட்டியையும் நடத்தியுள்ளனர். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று உசுப்பேற்றினார்.
கடந்த வாரம் விடுத்த அறிக்கையில், “ அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வரும் திங்கள்கிழமை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றால், முதல் வேலையாக, தமிழகத்தில் உள்ள பொறுக்கிகளை ஒடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மீண்டும் பொறுக்கிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்நிலையில், இன்று விடுத்த டுவிட்டர் பதிவில், “ பொறுக்கிகள் வெட்கத்தால் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு குறித்து கேலியும், கிண்டலும் பேசுகிறார்கள். ஆனால், நான் கேட்கிறேன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் மத்தியஅரசுப் படைகள் தானே பாதுகாப்பு கொடுக்கிறார்கள். தமிழக போலீசார் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.