தலை இழந்த முண்டங்களாக துள்ளிக் குதிப்பதை நிறுத்துங்கள்... அதிமுக அமைச்சர்களை எச்சரிக்கும் திமுக எம்.பி..!

By Asianet TamilFirst Published Feb 13, 2021, 10:07 PM IST
Highlights

ஜெயலலிதா இறந்தபின் தலை இழந்த முண்டங்களாக நீங்கள் துள்ளிக் குதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தி தொடர்புச் செயலாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
 

இதுதொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை விமர்சிப்பதாக எண்ணிக் கொண்டு உளறல் அமைச்சர்களில் ஒருவரான கடம்பூர் ராஜூ பல தவறான தகவல்களை தமது பேட்டியில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், காபி குடித்தார் என்றெல்லாம் பொய்களை அள்ளிவிட்ட கூட்டம், இன்று எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவர் இறந்து விட்டார் என்று கூறி திமுக வாக்கு கேட்டது என்று புளுகியிருக்கிறார். எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டார் என்று சொல்லி எப்படி வாக்குக் கேட்க முடியும்? பொய்யைச் சொல்வதில்கூட ஒரு பொருத்தம் வேண்டாமா?

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏறத்தாழ 1940-களின் இறுதியில் தொடங்கி 1972 வரை நட்பு நீடித்தது. கருணாநிதியின் கதை வசனம், தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். என் பெரியப்பா என்று மு.க.ஸ்டாலின் கூறியது எப்படி தவறாகும்? எம்.ஜி.ஆரை சுவரொட்டியில் பார்த்தவரெல்லாம் எம்.ஜி.ஆருக்கு உரிமை கொண்டாடும்போது மு.க.ஸ்டாலின் உரிமை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று திமுக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கடம்பூர் ராஜூவுக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது. ஆண்டைகளைக் குறை கூறினால் அடிமைகளுக்குக் கோபம் வரத்தானே செய்யும்.
தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்மொழிப் பாடம் கற்றுத்தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் கொடுத்தால் கடம்பூர் ராஜூவுக்கு ஏன் கோபம் வருகிறது? அந்த அளவுக்கா இந்த அடிமைக்குத் தமிழ்மொழி மேல் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் 24 பேர் மக்களவையிலும் 7 பேர் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மக்களவையில் 14 பேரும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.


திமுகவின் 31 உறுப்பினர்கள் 310 பேருக்குத்தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை செய்ய முடியும். 45,000 பேர் படிக்கும் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் தமிழ் இடம்பெற வேண்டுமென்று திமுக கோரிக்கை வைத்தால் கடம்பூர் ராஜூ 310 பேர் பற்றிப் பேசி தனது அவசர புத்தியையும் அறியாமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். பணம் வாங்குவது அதிமுகவின் ஒரே கொள்கை. அவர் கட்சி எம்பிக்களுக்கு பழக்கம். எந்தத் திட்டம் அறிவித்தாலும் அந்தத் திட்டத்தில் எவ்வளவு கமிஷன் வரும் என்று கணக்குப் போட்டே திட்டத்தை அதிமுக அமைச்சர்கள் அறிவிப்பார்கள். தமிழகத்தையே சுரண்டிக் கொள்ளையடித்த கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்துக்கு திமுகவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
தமிழக மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று சொன்னால் அதனை எதிர்க்கும் கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்தை தமிழக மக்கள் கவனித்துக் கொள்வார்கள். அடிமைகளே, நாவடக்கம் தேவை. நீங்கள் அடித்த கொள்ளைகள் குறித்த விவரம் மத்திய அரசுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்கள் வேண்டுமானால் பாஜகவின் காலைப் பிடித்து பிழைக்க நினைக்கலாம். ஆனால், திமுக தமிழையும் தமிழரையும் காப்பாற்றுவதற்காக உருவான இயக்கம். ஜெயலலிதா இறந்தபின் தலை இழந்த முண்டங்களாக நீங்கள் துள்ளிக் குதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று அறிக்கையில் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!