பாஜக என்பது தமிழர் விரோத கட்சி. அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் பத்திரிகைகளில் அதிமுக அரசு விளம்பரம் கொடுத்துவருகிறது. தமிழக மக்களை துச்சமென அதிமுக ஆட்சி நினைக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் தங்கள் வலிமையைக் காட்டுவார்கள். பாஜக என்பது தமிழர் விரோத கட்சி. அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும். தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மைனஸ் மார்க் மட்டுமே போட முடியும்.
ஏழைகளுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், பாஜக அதைச் செய்யவில்லை. இந்தியாவில் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தால் நிச்சயம் போராட்டம் வெடிக்கும். இந்தச் சட்டம் மதக்கலவரத்தைதான் தூண்டிவிடும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற மோசமான செயல் வேறு எதுவும் இல்லை. பல லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளன. ஆனால், அதை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, நாட்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாஜக அரசு என்ன செய்தது? பெட்ரோல், டீசல் விலை ரூ.90-ஐ தாண்டியுள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த தகவலும் பட்ஜெட்டில் இல்லை” எனக் கூறினார்.