கொரோனாவுக்கு போதிய தடுப்பூசி இல்லாத சூழல், நிதி பற்றாக்குறை இப்படியான இக்கட்டான சூழலில் பொறுப்பேற்க உள்ளார் ஸ்டாலின். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்லாட்சி தருவார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஜனநாயகத்தை மதிக்காத அதிமுக பாஜக கூட்டணியை நிராகரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வாக்களித்ததற்கு நன்றி. தனிப்பெரும்பான்மையை திமுக பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள்.
கொரோனாவுக்கு போதிய தடுப்பூசி இல்லாத சூழல், நிதி பற்றாக்குறை இப்படியான இக்கட்டான சூழலில் பொறுப்பேற்க உள்ளார் ஸ்டாலின். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்லாட்சி தருவார், சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக கடந்த 50 ஆண்டுகள் அவருக்கு கிட்டிய அரசியல் அனுபவத்தை கொண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி தருவார்.
மகத்தான வெற்றி பெற்று விரைவில் முதல்வராக பொறுப்பேற்க இருக்க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளோம். கொரோனா கொடுமையில் இருந்து மக்களை மீட்பதில் ஸ்டாலின் அரும்பணியாற்றுவார் என நம்பிக்கை, வளமான தமிழகம் அமையும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.